இங்கே ஆயிரம் குறைகளிருந்தாலும்,
எங்கும் வறுமை நிறைந்திருந்தாலும்,
எங்கள் நாடு எங்களுக்கு
எல்லா நாட்டினும் உயர்ந்ததே.
இங்கே ஊழல்கள் மலிந்திருந்தாலும்,
மக்களைச் சுரண்டுவோர் அதிகரித்தாலும்,
பொய்கள் பேசி வஞ்சித்தாலும்,
தீமைகளுக்கு எதிராய்ப் போராடுவோம்;
தேசத்தின் புகழைப் பாடுவோம்.
தீய சக்திகளை வேரறுப்போம்;
மக்கள் சக்தியை ஒருங்கிணைப்போம்.
இதன் விரோதிகள்
எங்கள் விரோதிகள்;
இதன் நண்பர்கள்
எங்கள் நண்பர்கள்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர்;
தாய்த்திரு நாட்டுக்கு துரோகம் செய்வோர்;
இவர்கள் களைகள்;
இவர்களைக் களைவோம்.
எங்கள் உழைப்பு நாட்டை உயர்த்தும்;
எங்கள் சிந்தனை நாட்டைத் திருத்தும்;
எங்கள் எழுத்துக்கள் வழிகாட்டும்;
எங்கள் எழுச்சி நாட்டைக் காக்கும்.
நாங்கள் சோர்வடைவதில்லை;
பொய்மைக்கும் வஞ்சகத்திற்கும்
பணிந்து போவதில்லை;
அடக்குமுறைகளுக்கும் அராஜகங்களுக்கும்
அஞ்சி நடுங்குவதில்லை.
போராடுவோம்; போரும் தொடுப்போம்.
இது இந்தியர்களின் முழக்கம்;
இது என்றும் ஓயாது முழங்கும்.
0 comments:
Post a Comment