
பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. கல்லணைக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட்டிருந்த தண்ணீரை அன்றுதான் அடைத்திருந்தார்கள்.
கொள்ளிடத்தின் ஆற்றுப் படுகை ஆங்காங்கே நீர்வற்றியதில் மணல் தோன்ற அழகாகத் தோற்றமளித்தது. தூய்மையான பொன்மணல் தன்மீது படுத்துப் புரள அழைத்தது எனலாம்.
அந்த மணலில் சென்று நிற்கவேண்டும் என்ற ஆசை தோன்றுவது இயல்புதானே ? எனக்கும் தோன்றியது. ஆற்று மணலுக்குள் இறங்கக் காலெடுத்தேன். என் தோளில் ஒரு கை விழுந்தது. கை தொட்டவர் அப்பகுதிக்காரர்.
‘எங்கே தம்பி போறீங்க ?’
‘அதோ... அந்த மணல்கிட்ட போயிப் பார்க்கலாம்னு...’
‘அப்படியா...’ என்றவர் குனிந்த தன் காலடியில் கிடந்த விக்ஸ் டப்பா அளவிலான சிறிய கூழாங்கல்லை எடுத்து என்னிடம் தந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
‘நீங்க போக நினைச்ச அந்த மணல் மேல இந்தக் கல்லைப் போடுங்களேன்...’ என்றார். நான் அவரை விநோதமாகப் பார்த்தபடியே மணல்மீது தூக்கிப் போட்டேன்.
கல் மணல்மீது சென்று விழுந்து கொஞ்சம் உருண்டோடி நின்றது. மீண்டும் அவர் குனிந்து தேடி நல்ல கனமான கூழாங்கல்லாக எடுத்தார். அந்தக் கல் டிபன் பாக்ஸ் அளவிற்குப் பெரிது.
அதை என்னிடம் தந்து ‘இப்ப இந்தக் கல்லைப் போடுங்க...’ என்றார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அவர் தந்த பெரிய கல்லை வாங்கி நான் இறங்கி நிற்க நினைத்த அந்த மணல் பகுதிமீது வீசினேன்.
அந்தக் கல் விழுந்த வேகத்தில் மணற்பரப்பு மிகமிக நுணுக்கமாகத் ததும்பியது. சில நொடிகள் மணற்பரப்பில் அமர்ந்திருந்த அந்தப் பெரிய கல் ‘பொதக்’ என்ற ஓசையோடு புதைந்தது. கல்லை உள்வாங்கிக்கொண்ட மணற்பரப்பு மீண்டும் பழைய அழகுக்குத் திரும்பிவிட்டது. எனக்கு உயிரெல்லாம் சிலிர்த்துப் போயிற்று. அவரைப் பீதி கலையாமல் பார்த்தேன்.
‘என்ன தம்பி பார்க்கறீங்க...? அது புதைமணல் திட்டு. தண்ணீரே இல்லாம வற்றிக் காஞ்சுபோன மாதிரி இருக்கும். ஆனா மேல்மணலுக்குக் கீழே பத்திருபது அடி ஆழத்திற்குப் புதைசேறுதான் இருக்கும். காவிரி ஆற்றுக்குள்ள மணலை நம்பி இறங்கவே கூடாது. எல்லாம் புதைமணல்தான். அங்க போயி எறங்கப் பார்த்தீங்களே... போங்க தம்பி.’ என்றவாறே சென்றார்.
அன்றுமட்டும் அவர் என்னைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் என்னவாகியிருக்கும் ?
இப்போது செல்லும் வெள்ளத்தின் பின்னும் அதுபோன்ற புதைகுழிகள் காவிரியிலும் அதன் துணையாறுகளிலும் ஏற்பட்டிருக்கும். காவிரியைப் பார்க்கச் செல்லும் மக்கள் கரையோடு நின்று பார்த்துவிட்டு பொறுப்புடன் திரும்புவது நல்லது. காவிரியின் படுகையெங்கும் புதைமணல் குளங்கள் தோன்றியிருக்கும்.
பாறைகள் இல்லாத பகுதிகளில் இறங்கவே வேண்டா. பாறைகளோ பெருங்கற்களோ இருந்தால் அவற்றின்மீது நின்று நீரில் கால்நனைக்க நினையுங்கள். மணலையோ மண்பகுதியையோ நம்பி இறங்காதீர்கள்.
0 comments:
Post a Comment