Tuesday, July 16, 2013

உயிரும் உடலும் ......


உயிரும் உடலும் நலமாக இருக்க நாம் சத்தான உணவு உண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் எதை சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது என்ற கேள்விகளும் நம்மிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. எதை சாப்பிட வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்ற அறிதல் இருந்தால் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழலாம் என்ற புரிந்துணர்வை இப்புத்தகம் ஏற்படுத்துகிறது. நிறம், மணம், கார்ப்பு என மூவகை குணம் கொண்ட வெற்றிலையை நாம் ஒதுக்கி வைத்துவிட்டோம். வெற்றிலையை போடுவதற்கு ஒரு முறை உண்டு என்று அதை விளக்கியுள்ளார் .வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தண்ணீருடன் புகட்டினால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை சரியாகிவிடும் என்று வெற்றிலைப் பற்றி இத்தனை விஷயங்களா என்று வியக்க வைக்கிறார் ஆசிரியர். மேலும் இயற்கையிலேயே நமது உடலில் நிறநிதிருக்கும் நோய் எதிர்க்கும் ஆற்றலோடு இயற்கை உணவான அரிசி, வெற்றிலை காய் கனிகள் கோதுமை காற்று நீர் கிழங்குகள் கீரைகள் எனப் பல உணவுப் பொருட்களின் அரிய சக்திகளும் கலக்கும்போது, நீண்டகாலம் வாழ்வதற்குத் தேவையான ஆற்றல் நமக்கு எளிதில் கிடைக்கிறது என்று ஆசிரியர் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளந்தெளிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு உணவு வகைகளிலும் என்ன மருத்துவ பலன்கள் உள்ளன என்பதை தெரிவிக்கும் நூலாக இது உள்ளது. அறுசுவை உணவும் அதற்கான அரிய பலன்களையும் பட்டியலிடுகிறார். சுவை, ருசி, பசி இவற்றுக்காக மட்டும் நாம் சாப்பிடுவதில்லை. நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்கள் & செல்களின் இயக்கம் மற்றும் உற்பத்தி சரிவர இருந்தால் தான், உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். இயற்கை உணவுகளை சாப்பிடுவத் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. ஆற்றல் உருவாகிறது. நோய் உண்டாவதும் தடுக்கப்படுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் சில கட்டுரைகளில் விளக்கியுள்ளார் ஆசிரியர். நார்ச்சத்தின் தேவை, அது என்னன்ன உணவுப் பொருட்களில் உள்ளது, அதை உட்கொள்வதால் ஏற்படும் பலன்களை தெளிவாகவும் சுவையாகவும் சொல்லியுள்ளார். நம் நாடு முழுவதும் முக்கிய உணவாக ஒத்துக் கொள்ளப்பட்ட கோதுமையின் சிறப்புகளைப் பற்றி சிறப்பாக எடுத்திச் சொல்லியுள்ளார். உடல் சக்திக்காக மட்டுமில்லாமல் அழகுக்காவும் பயன்தரும் உணவு வகைகளைக் கூட வகைப்படுத்தியுள்ளார். இயற்கையின் கொடையான பழங்களைப் பற்றி ஆராய்ந்து எளிய மொழியில் ஒவ்வொரு பழங்களின் சத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார். நம்மில் பலர், தேவையற்ற சில நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நம்புகின்றனர். இது தவறாகக் கருத்தாகும். உள்ளே இருக்கின்ற கபத்தை வெளியே தள்ளும் சக்தி பழங்களுக்குத்தான் உள்ளது. சளி உண்டாவது & எண்ணெய், பால், மாவுப்பொருட்களால்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் முட்டை, பால், தேன், இளநீர்,போன்றவற்றின் சிறப்பை விளக்கி நம் உடலுக்கும் உயிருக்கும் மிகத் தேவையான நீரைப் பற்றியும் ஒரு பகுதியில் எழுதியுள்ளார். உயிர், உடல், உள்ளம் இவை மூன்றிலும் புத்துணர்வை அளித்து இயற்கை உணவே மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்ற கருத்தை இப்புத்தகம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்கிறது.

0 comments:

Post a Comment